Wednesday, September 25, 2024
Homeபொருத்தமான நபரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு பணிப்பு..!

பொருத்தமான நபரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு பணிப்பு..!

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதன்படி, இந்த இடைக்கால தடை உத்தரவு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சட்டத்திற்கு அமைய பொருத்தமான நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவுகளை அறிவித்துள்ளது.

இந்த மனு விசாரணையில் நீதிமன்றத்தின் முன் வலுவான வழக்கை நிறுவுவதில் மனுதாரர்கள் வெற்றி பெற்றுள்ளதாக நீதிபதி யசந்த கோதாகொட தெரிவித்தார்.

இதன்படி, குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த மனு விசாரணை நிறைவடையும் வரை, பிரதிவாதியான தேசபந்து தென்னகோன், பொலிஸ் மா அதிபர் பதவியில் கடமையாற்றுவதற்கும், தனது அதிகாரங்களைச் செயற்படுத்துவதற்கும், கடமைகளைச் செய்வதற்கும் தடை விதிக்கப்படுவதாக நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

அதன்பிறகு, மனுக்கள் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், நவம்பர் 11 ஆம் திகதி மீண்டும் மனுக்களை விசாரிக்கவும் உத்தரவிட்டனர்.

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, அதி வண. கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்டோர் சமர்ப்பித்த 9 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்று உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments