இலங்கை – அயர்லாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான ரி 20 சர்வதேச போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியது.
முதல் ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றியீட்டிய நிலையில் இரண்டாவது ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.
ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையாக களமிறங்கிய கெபி லிவிஸ் 75 பந்துகளில் 119 ஓட்டங்களை விளாச, இறுதியில் அயர்லாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களை குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணியில் ஹர்சிதா சமரவிக்ரம 44 பந்துகளில் 65 ஓட்டங்களை விளாசினாலும், இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 166 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 7 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
இதனால் இரு போட்டிகள் கொண்ட ரி 20 சர்வதேச தொடர் 1-1 என சமநிலையில் நிறைவடைந்தது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது.