நம் வீட்டில் பெற்றோருடன் சாப்பிடுவதற்கும், வெளி இடங்களில் பலர் முன்னிலையில் சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நம் வீட்டில் ஆடி-ஓடி, உருண்டு-புரண்டு உணவு சாப்பிட்டாலும் அதில் தவறில்லை. ஆனால் வெளி இடங்களில், அதுவும் பலர் முன்னிலையில் உணவு சாப்பிட ஒரு வரைமுறை இருக்கிறது. உறவினர்களோடும், பள்ளி நண்பர்களோடும், தெரியாத நபர்களோடும் உணவு சாப்பிடும்போது, பல விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். அவை என்னென்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
நம் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் பொது இடத்திலும், விருந்து நிகழ்ச்சியிலும் அடுத்தவர் முன்னிலையில் வாயை திறந்து மெல்லக்கூடாது. அது அடுத்தவர்களை அவமரியாதை செய்வதுபோல கருதப்படும்.
அவசரம் அவசரமாக வாயில் அதிக உணவை திணித்து சாப்பிடுவது, தவறான பழக்கம். அதை எப்போதும் பழகாதீர்கள். உணவை மெல்ல மென்று, ருசிபார்த்து மெதுவாகவே விழுங்கவேண்டும். இந்த விஷயத்தை வீட்டிலும், வெளி இடங்களிலும் கட்டாயம் கடைப்பிடியுங்கள். அவசர அவசரமாக உணவை வாயில் திணிப்பதால், உங்களின் மரியாதை சபையில் குறையும்.
‘டைனிங் டேபிள்’ விருந்தில் பலருடன் சாப்பிடும்போது, சில சமயங்களில் பேச வேண்டிவரும். அப்படி ஒரு சூழ்நிலை உருவானால், அடுத்தவர் ஒரு கருத்தை பேசி முடிக்கும் வரை காத்திருந்து பிறகு பேசுங்கள். ஏனெனில் பிறர் பேச்சை இடைமறித்து பேசுவது, அநாகரிகமாக கருதப்படும்.
உங்களுக்கு பிடித்த உணவு பலகாரம் ஒன்று, நீங்கள் அமர்ந்து உண்ணும் இடத்திற்கு வெகு தொலைவில் இருந்தால், அதை கேட்டு வாங்கி சாப்பிடுங்கள். பிடித்த உணவை கேட்டு வாங்கி சுவைப்பது, தவறில்லை. ஆனால் தயக்கத்தோடு அடுத்தவர் தட்டை பார்ப்பது தவறு.
நாம் சாப்பிட்ட தட்டை நாமே எடுத்து செல்லும் பண்பை குழந்தைகளிடம் வளர்ப்பது நல்லது. ஒருசில மேலை நாடுகளில், குழந்தைகளையே சாப்பாட்டு தட்டை எடுத்து செல்லச் சொல்கிறார்கள். ஒருசில நாடுகளில் சாப்பிட்ட தட்டை குழந்தைகளே கழுவி வைக்கிறார்கள். அதனால் நம் குழந்தைகளிடம், தட்டை கழுவும் இடத்தில் கொண்டு போய் போடும் பழக்கத்தையாவது வளர்க்கவேண்டும்.
இவை டேபிள் மேனர்ஸின் ஒருசில பண்புகள்தான். இதுபோக நிறைய பண்புகள் இருக்கின்றன.