நாளை முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 15 மாவட்டங்களிலுள்ள, 95 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 20,588 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மேல் மாகாணத்தில் சிக்குன்குன்யா நோய்த் தொற்றும் அதிகரித்துள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களைச் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.