மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த கல்யாண் மங்கலராகோ பகுதியில் சப்தசுருங்கி என்ற 4 மாடி கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே மழைக்காலம் தொடங்கும் முன் கட்டிடத்தைக் காலி செய்யுமாறு குடியிருப்புவாசிகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது.
இந்நிலையில், கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டில் கட்டுமான பணிகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் நேற்று மதியம் 2-வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் காங்கிரீட் கூரை திடீரென இடிந்து கீழ்ப்பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் கீழ் வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் உயிருக்குப் போராடியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறுமி நமஸ்வி (2), பெண்கள் பிரமிளா (56), சுனிதா (38), சுஷிலா (78), சுஜாதா (38) மற்றும் வெங்கட்(42) ஆகிய 6 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.