10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
ஏற்கனவே அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைந்து விட்ட அந்த அணி முந்தைய ஆட்டத்தில் லக்னோவிடம் 33 ரன் வித்தியாத்தில் தோல்வி கண்டது.
அந்த சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்பி அடுத்த சுற்றில் உத்வேகத்துடன் களம் இறங்கும் முனைப்புடன் உள்ள குஜராத் அணி டாப்-2 இடங்களுக்குள் நீடிக்க தீவிரம் காட்டும்.
5 முறை சாம்பியனான சென்னை அணி வழக்கத்துக்கு மாறாக மோசமான நிலையில் இருக்கிறது. 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (மும்பை, லக்னோ, கொல்கத்தாவுக்கு எதிராக) 10 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
ஐ.பி.எல். வரலாற்றில் அந்த அணி கடைசி இடம் பெற்றது கிடையாது.
பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே கடைசி இடத்தை தவிர்க்கலாம்.
43 வயதான டோனிக்கு இது கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய வெற்றியோடு நிறைவு செய்து கடைசி இடத்தை தவிர்க்க சென்னை அணி போராடும்.
ஆனால் வலுவான பேட்டிங் மற்றும் பந்து வீச்சை கொண்ட குஜராத் அணியின் சவாலை சமாளிப்பது எளிதானது கிடையாது என்பதில் சந்தேகமில்லை.