10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது.
நடப்பு தொடரில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. மீதமுள்ள அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
ஐ.பி.எல் இறுதிப்போட்டி வருகிற ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறவுள்ள நிலையில், இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக முப்படை தளபதிகளுக்கு பி.சி.சி.ஐ அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக இந்திய ஆயுதப் படைகளின் தளபதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு அகமதாபாதில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஆயுதப் படைகளின் வீரம், தைரியம் மற்றும் தன்னலமற்ற சேவைக்கு பி.சி.சி.ஐ சல்யூட் செய்கிறது. ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஐ.பி.எல் நிறைவு விழாவில், நமது ஹீரோக்கள் கவுரவிக்கப்படவுள்ளனர்.
நாட்டில் கிரிக்கெட் அதீதமாக நேசிக்கப்பட்டாலும், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பைவிட வேறு எந்த ஒரு விஷயமும் பெரிதல்ல. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.