ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் பரவிவரும் ஒமிக்ரோன் வைரஸின் 2 உப திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனினும் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை எனவும், உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும், சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல வைத்தியசாலைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகளின் அடிப்படையில் ஒமிக்ரோன் கொவிட்-19 வைரஸின் 2 திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
முகக்கவசம் அணிதல், நெரிசலான இடங்களில் இருப்பதைத் தவிர்த்தல் மற்றும் கைகளைக் கழுவுதல் போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என, விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜெமஹா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கராப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவொன்றின் உயிரியல் மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
எனினும், ஆசிய நாடுகளில் பரவி வரும் வைரஸ் திரிபினால் சிசு பாதிக்கப்படவில்லை என்பது இதன்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மாத்திரம் 3,000க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த திரிபு தொற்றுறுதியாகியுள்ளதுடன், 7 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.