அமெரிக்காவின் பொல்டர் நகரில் பெர்ல் தெருவில் நேற்று (1) இடம்பெற்ற அமைதி பேரணியில் காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் பிடியில் உள்ள பணயக் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி அமைதி பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் அமெரிக்கா வாழ் இஸ்ரேலியர்கள், யூதர்கள், இஸ்ரேல் ஆதரவாளர்கள் என பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில், பேரணியின்போது திடீரென பெற்றோல் குண்டுகளுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது குண்டுகளை வீசினார். இந்த தாக்குதல் சம்பவத்தில் பெற்றோல் குண்டுகள் வெடித்து தீப்பற்றி எரிந்தன.
குறித்த பேரணியில் பங்கேற்ற 6 பேர் படுகாயமடைந்தனர். ‘பலஸ்தீனம் விடுதலை’ என்ற கோஷம் எழுப்பி குறித்த நபர் இந்த தாக்குதலை நடத்தினார்.
சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மேலும், பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்திய நபரை பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த தாக்குதலானது தீவிரவாத தாக்குதல் என்று பொலிஸார் அறிவித்துள்ளதோடு கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.