சுனாமி வீட்டில் வசிக்கும் மீனவருக்கு 67,000 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக மாவட்டமான ராமநாதபுரம், மண்டபம் அருகே வேதாளை கிராமத்தில் அரசு இலவசமாக கட்டிக் கொடுத்த சுனாமி வீட்டில் வசிக்கும் மீனவர் ஷேக் ஜமாலுதீன். இவருக்கு இந்த மாத மின் கட்டணம் 67,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று பில் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று புகார் அளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மீனவர் கூறுகையில்,
“எனது வீட்டிற்கு வழக்கமாக 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை மின் கட்டணம் வரும்.
ஆனால், இந்த மாத மின் கட்டணம் 67,000 ரூபாய் வந்ததால் அதிர்ச்சி அடைந்தோம். இதுகுறித்து மண்டபம் மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை.
இதனிடையே, மின்கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் தான் முறையான மின்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்.
மேலும், வீட்டு மீட்டர் ஆகியவற்றை சோதனை செய்த பின்னரே, முறையான மின்கட்டணம் நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்” என்றார்.
