பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும், சுமார் 18 உயர் அரச அதிகாரிகளைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட விசாரணைக் குழுக்கள் இதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட, 5 உயர் அரச அதிகாரிகள் தற்போது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளையும், விசாரணைக் குழுக்கள் ஆராய்ந்து வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அண்மையில் மோசடி சம்பவமொன்று தொடர்பாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, போதைப்பொருள் கடத்தலில் இருந்து ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல உடமைகளை பணச்சலவை சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அதன்படி, நடத்தப்பட்ட விசாரணையில், பொரளை பகுதியில் வசிக்கும் ஆணொருவரும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அதற்கமைய, பொரளை பகுதியில் உள்ள 3 மாடி வீடுகள், கந்தானை பகுதியில் 4 மாடிகளை கொண்ட ஒரு வீடு மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக பெறப்பட்டதாக நம்பப்படும் 2 சிற்றுந்துகள் ஆகியவை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
