பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் ஒருவரை கைது செய்யச் சென்ற பொலிஸார், விசேட அதிரடிப் படையினருக்கும் நாகர்கோவிலை சேர்ந்த பொதுமக்களுக்கும் இடையே நேற்று முறுகல் ஏற்பட்டது. இதனால், அங்கு பதற்றம் நிலவியது.
வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பெண் ஒருவரை கைது செய்வதற்காக மருதங்கேணி பொலிஸார் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள பெண்ணின் வீட்டுக்கு சென்றிருந்தனர்.
அந்தப் பெண்ணை கைது செய்த பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியை பொலிஸார் மோப்பநாய்கள் மூலம் சோதனையிட்டனர்.
இதன்போது, பொலிஸார் அத்துமீறி செயல்படுகின்றனர் என்று கூறி பொதுமக்களில் சிலர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதேவேளை, நேற்று அதிகாலை அந்தப் பகுதியில் 9 கஞ்சா பொதிகளை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியிருந்தனர். இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
