வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்துத் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற மீனவரின் படகின் இயந்திரத்தில் தூண்டில் கயிறு சிக்கியுள்ளது. அதனை சீர்செய்ய முற்பட்ட போது அவர் கடலில் வீழ்ந்து காணாமல் போனார் என கூறப்படுகிறது.
பின்னர் அவருடன் சென்ற சக தொழிலாளி தகவல் வழங்கியதைத் தொடர்ந்து பருத்தித்துறை கொட்டடிப் பகுதி மீனவர்கள் சுமார் 25இற்கு மேற்பட்ட படகுகளில் தேடுதல் நடத்தி சடலத்தை கண்டுபிடித்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கரை சேர்ந்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட மீனவர் பருத்தித்துறை கொட்டடியைச் சேர்ந்த விஜயகுமார் நிக்சன் (வயது 23) என்ற ஒரு குழந்தையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

