
பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரிக்கும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையான 109 ஆவது பெருஞ்சமர் சமநிலையில் நிறைவடைந்தது.
இத் துடுப்பாட்டப் போட்டி வட்டுக்கோட்டை யாழப்பாணக் கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம் ஆரம்பமானது. முதல் நாள் ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற புனித பத்திரிசியார் கல்லூரி களத்தடுப்பினை தெரிவுசெய்ய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி துடுப்பெடுத்தாடியது.
யாழ்ப்பாணக் கல்லூரி முதல்நாள் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து176 ஓட்டங்களை பெற்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களை பெற்ற நிலையில் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
இரண்டாம்நாள் ஆட்டத்தை தொடர்ந்த புனித பத்திரிசியார் கல்லூரி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றநிலையில் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது.
இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி 3 விக்கெட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை பெற்றநிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தின் இரண்டாம் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாம் இன்னிங்ஸினை இன்று (14) தொடர்ந்த யாழ்ப்பாணக் கல்லூரி 9 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்ற நிலையில் டிக்களே முறையில் ஆட்டத்தினை முடித்துக்கொண்டது.
இன்று இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி 4 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி அணியின் எஸ்.கே.ஹமிஸ் ஹர்மிஷன் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.
