மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்கள் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
தற்போதைய சூழ்நிலை காரணமாக, உலகெங்கிலும் குறிப்பாக மத்திய கிழக்கிலும் தங்கியுள்ள அமெரிக்கர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இராஜாங்கத் திணைக்களம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதற்கமைய, அனைத்து அமெரிக்கர்களும் தமக்கு அருகிலுள்ள அமெரிக்க தூதரகம் அல்லது தூதரக அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமான எல்லைகள் அவ்வப்போது மூடப்படலாம் என்பதுடன், மத்திய கிழக்குக்கு வெளியேயுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இராஜதந்திர வசதிகள் இலக்கு வைக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் ஆதரவு குழுக்களினால் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க நலன்கள் அல்லது அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்கள் இலக்கு வைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தக் காரணங்களினால் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறு கோரி, உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு இந்த விசேட எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
