“பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு பங்களிப்பை வழங்கியவரே சுரேஷ் சாலே.அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை தேசத்துரோக நடவடிக்கையாகவே கருதுகின்றோம்.”
-இவ்வாறு பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல விசாரணைகள் நடந்தன. அந்த விசாரணைகளில் சுரேஷ் சாலேயுக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படவில்லை. வெளிநாட்டு விசாரணைகளில்கூட அவரின் பெயர் இடம்பெறவில்லை.
எனவே, இப்போது எவ்வாறு சாட்சி கிடைத்து என்பதே எமது கேள்வியாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவதற்கும், புலி ஆதரவாளர்களை திருப்திபடுத்துவதற்காகவுமே சுரேஷ் சாலே இலக்குவைக்கப்பட்டுள்ளார்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.
