யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரை தமிழக மீனவர்கள் கடுமையாக தாக்கி தமிழகத்திற்கு கடத்தி சென்ற நிலையில் தமிழக கடலோர காவல் படையினரால் குறித்த கடற்றொழிலாளி மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணம் மயிலிட்டி மற்றும் வளலாய் பகுதியை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் பலாலி வடக்கில் இருந்து சுமார் 15 கடல் மைல் தூரத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளை அப்பகுதிக்கு வந்த தமிழக கடற்றொழிலாளர்கள் அவர்களுடன் முரண்பட்டு, தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதில் இருவர் படகுடன் தப்பி வந்த நிலையில், ஒருவரை தமிழக கடற்தொழிலாளர்கள் பிடித்த தமது படகில் ஏற்றி மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியதுடன் அவரை தமிழகம் நாகப்பட்டினம் பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.
அங்கு கீழையூர் பொலிஸார், யாழ்ப்பாண கடற்றொழிலாளரை மீட்டுள்ளனர். அவரது முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்பட்டமையால், நாகப்பட்டினம் அரச மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதேவேளை , ஆற்காட்டுத்துறைக்கு தென்கிழக்கு பகுதியாக 09 கடல்மைல் தூரத்தில் தாம் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளை பைவர் படகில் வந்த மூவர் தமது வலைகளை அறுத்து , அட்டகாசம் புரிந்தனர் எனவும், அவர்களை தாம் மடக்கிப் பிடிக்க முற்பட்ட வேளை, இருவர் படகுடன் தப்பி சென்ற நிலையில், படகில் வந்த ஒருவரை தாம் மடக்கி பிடித்து தமது படகில் ஏற்றி நாகப்பட்டினத்திற்கு கொண்டுவந்தனர் எனவும் தமிழக கடற்தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
