ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்து, வழக்கு விசாரணை முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மோஷன் ஒன்றின் மூலம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு நேற்று முன்தினம் பிணை வழங்கப்பட்டது.
இருப்பினும், அவர் பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையை சிதைத்துள்ளதாகக் குறிப்பிட்ட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பிடியாணை உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரியது.
