யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இதய சிகிச்சை ஆய்வகங்களை மருத்துவமனைகளில் நிறுவுவதற்கு சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதற்காக 310 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் தேசிய மற்றும் போதனா மருத்துவமனைகளில் இந்த ஆய்வகங்கள் நிறுவப்படும்.
ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை ஆகியவற்றின் நிதிப் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த ஆய்வகங்கள் மூலம் இதயத் தமனிகளில் உள்ள அடைப்புகளைக் கண்டறியும் இதய இரத்த நாளப் பரிசோதனை, இதய அடைப்பு நீக்கி பொருத்துதல் மற்றும் இதயத் துடிப்பு சீராக்கிகளை பொருத்துதல் போன்ற நவீன சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
