மலேசியாவின் பேராக், ஈப்போவில் உள்ள Anjung Bercham-மில் நேற்று மாலை வீசிய பயங்கர புயல் காற்றினால், 7 குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததாக கிந்தா மாவட்ட பொதுத் தற்காப்புப் படை தெரிவித்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த கடுமையான புயலால் அப்பகுதி உருக்குலைந்தது.
புயலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பல வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்ததோடு, மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் அங்கு முழுமையாக மின்விநியோகம் தடைபட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வீதிகளில் விழுந்து கிடக்கும் மரங்கள் மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈப்போ மாநகர மன்றத்தின் அவசரக்கால மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு கருதி சில பகுதிகளில் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது.
