வடமராட்சியின் மூத்த பத்திரிகையாளரில் ஒருவரான ஏ. என்.எஸ். திருச்செல்வம் கடந்த ஐந்து ஆண்டுகளாக சுகவீனமுற்ற நிலையில் இன்று வியாழக்கிழமை மாலை 6.00 மணியளவில் தனது 74 ஆவது வயதில் புலோலி, புற்றளையில் உள்ள இல்லத்தில் காலமானார்.
இவர் கடந்த 1975 ஆண்டு காலப்பகுதியில் லேக்கவுஸ் நிறுவனத்தின் வெளியீடான தினகரன் பத்திரிகையில் பருத்தித்துறை குறூப் நிருபராக இணைந்து கொண்டார்.
தொடர்ந்து 1977 ஜுன் மாதம் முதல் ஈழநாடு பத்திரிகையில் இணைந்து கொண்டார். இவ்விரு நிறுவனங்களின் செய்தியாளராகப் பணியாற்றியதோடு பின்நாளில் கொழும்பு, யாழ். தினக்குரல் பத்திரிகையின் பருத்தித்துறை நிருபராகவும் பணிபுரிந்தார். சில காலம் யாழ். தினக்குரலிலும் உதவி ஆசிரிராகப் பணியாற்றி இருந்து வந்தார்.
பருத்தித்துறை பிரதேச சபையின் பொது நூலகராக கடமையாற்றிய அவர் கலாபூஷணம், கலைப்பருதி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
சுமார் 45 ஆண்டு காலம் பத்திரிகைச் செய்தியாளராகப் பணியாற்றிய அமரர் திருச்செல்வம் கடந்த ஐந்து வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
இவர் தனது சேவைக்காலத்தில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், வட இலங்கைப் பத்திரிகையாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும், செயலாளராகவும் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
பருத்தித்துறை வராத்துப்பளையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் நீண்ட காலமாக புலோலி புற்றளையை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியை தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
