மத்திய கிழக்கு போரில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் தலைநகா் டெஹ்ரானில் தொடங்கிய நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த சிறிய சவப்பெட்டி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில், கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்ட நிலையில், அவரது 14 மாதங்களே ஆன பேர்த்தி ஸாஹ்ரா மொஹமதி கோல்பயேகனியும் கொல்லப்பட்டார். இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் கமேனியின் சவப்பெட்டியுடன் உறவினர்கள் மற்றும் 14 மாத பேர்த்தியின் சவப்பெட்டியும் உள்ளது. அந்த சவப்பெட்டியின் அருகே குழந்தையின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இது பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது என்று கூறப்படுகிறது.
ஒரு வாரக்கால இறுதிச் சடங்கு நிகழ்வுகள் முறைப்படி தொடங்கிய நிலையில், ஈரான் மதகுருமாா்கள், உயா் தலைவா்கள், அரசு அதிகாரிகள், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்பட வெளிநாட்டுத் தலைவா்கள், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் இறுதி மரியாதையைச் செலுத்துகிறார்கள்.
கடந்த பெப்ரவரி அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா். இதே தாக்குதலில் படுகாயமடைந்த இவரின் மகன் மோஜ்தபா கமேனி புதிய தலைமை மதகுருவாக பொறுப்பேற்றாா். ஆனால், அவா் இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. இறுதிச் சடங்கிலும் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈரானின் இஸ்லாமியக் குடியரசு மீது மக்களின் பற்றை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வார கால பிரம்மாண்ட இறுதிச் சடங்கு நிகழ்வுகளுக்கு அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
ஈரானின் முந்தைய தலைமை மதகுரு அயதுல்லா ருஹோல்லா கொமேனியின் நினைவாகக் கட்டப்பட்ட பிரம்மாண்ட பிராா்த்தனைக் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இறுதி அஞ்சலியைத் தொடா்ந்து டெஹ்ரானில் வரும் திங்களன்று இறுதி ஊா்வலமும், செவ்வாயன்று கோம் நகரிலும், புதனன்று இராக்கின் புனித நகரங்களிலும் சடங்குகள் நடைபெற்று, வியாழக்கிழமை மஷாத் நகரில் இறுதி அடக்கம் நடைபெறும் என்று தெரிகிறது. இஸ்லாமிய முறைப்படி மறைந்தவர்கள் உடல்கள் உடனடியாக அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றாலும், போா்ச் சூழல் காரணமாக தற்காலிக போா்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் வரை இறுதிச்சடங்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
