நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல்களைத் தொடர்ந்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, நேற்று மாலை 6 மணியளவில் நீர்கொழும்பிலிருந்து 60 கைதிகள் ஆயுதம் தாங்கிய பாதுகாப்புப் பிரிவினரின் துணையுடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டு, சிறைச்சாலை அத்தியட்சகர் இந்திக்க ரங்கண பெரேராவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைதிகளின் வருகையைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 400 கைதிகளை மட்டுமே பராமரிக்கக் கூடிய கொள்ளளவைக் கொண்ட மட்டக்களப்பு சிறைச்சாலையில், ஏற்கனவே இடநெருக்கடிகளுக்கு மத்தியில் 960 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நீர்கொழும்பிலிருந்து மேலும் 60 கைதிகள் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மட்டக்களப்பு சிறையிலுள்ள மொத்தக் கைதிகளின் எண்ணிக்கை 1,020 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இதே அவசர இடமாற்றத் திட்டத்தின் கீழ் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து மேலும் 63 கைதிகள் ஆயுதம் தாங்கிய பாதுகாப்புப் பிரிவினரின் துணையுடன் பொலன்னறுவை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்த அதிகாரிகளிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
