கனடாவின் எட்மண்டன் நகரில், மாரடைப்பால் உயிருக்கு போராடிய ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவருக்கு, பாராட்டுக்கு பதிலாக பெரும் தொகைக்கான மருத்துவ கட்டணப் பட்டியல் வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கமருத்துவர் இயன் சுதாந்தோ ரிவர்பெண்ட் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருடன் விளையாடிய சக வீரர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உணர்ந்த மருத்துவர் இயன், உடனடியாக முதலுதவியான சி.பி.ஆர் (CPR) வழங்கத் தொடங்கினார்.
அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த பாடசாலையில் தானியங்கி இதய அதிர்வு கருவி (AED) இருந்ததால், அதைக்கொண்டு தீவிர முயற்சி செய்து அந்த நபரை மீண்டும் சுவாசிக்க வைத்தார்.
மருத்துவமனைக்கு வெளியே நான் சி.பி.ஆர் செய்வது இதுவே முதல்முறை. நல்லவேளையாக அங்கு அந்த AED கருவி இருந்தது. அதுதான் அவரது உயிரைக் காக்க முக்கிய காரணமாக அமைந்தது, என்று இயன் பின்னர் தெரிவித்தார்.
இதற்கிடையில் அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, மீட்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, தொடர்ந்து சி.பி.ஆர் செய்ததால் சோர்வடைந்திருந்த மருத்துவர் இயனையும் அங்கிருந்த மருத்துவ உதவியாளர் ஒருவரையும் பரிசோதித்துச் சென்றனர்.
விபத்து நடந்து சில நாட்களுக்குப் பிறகு, மருத்துவர் இயனுக்கு தபாலில் ஒரு கடிதம் வந்தது. அதைத் திறந்து பார்த்த அவருக்குப் பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது.
அவசர மருத்துவக் குழுவினர் அவரைப் பரிசோதித்ததற்காக 250 டொலர் கட்டணம் செலுத்தக் கோரி ‘அம்புலன்ஸ் பில்’ அனுப்பப்பட்டிருந்தது.
இதுகுறித்து அவர் கூறும்போது, “அம்புலன்ஸில் சென்றால் மட்டுமே கட்டணம் வசூலிப்பார்கள் என்று நினைத்தேன். அவர்கள் வந்து நம்மைப் பரிசோதித்தாலே கட்டணம் வசூலிக்கப்படும் என்பது எனக்குத் தெரியாது,” எனக் குறிப்பிட்டார்.
இந்த விடயம் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, ஆல்பர்ட்டா சுகாதார சேவைத் துறை (AHS) உடனடியாக தலையிட்டு மருத்துவர் இயனுக்கு அனுப்பப்பட்ட கட்டண பட்டியலை ரத்து செய்தது.
மேலும், இந்த விசித்திரமான விதிமுறையை மறுபரிசீலனை செய்யவுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், மருத்துவர் இயனால் காப்பாற்றப்பட்ட நபர், வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை முடிந்து தற்போது நலமுடன் வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
