காஸா மீதான இஸ்ரேலின் போரில், இதுவரை சுமார் 60,000 பலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில், கடந்த 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,000இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, காஸா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை 73,000 இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2023 ஒக்டோபர் முதல் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 60,737 குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாக, காஸாவின் சுகாதார அமைச்சகம் இன்று (ஜூலை 29) அறிவித்துள்ளது.
இதில், 52,095 குழந்தைகள் தங்களின் தந்தையையும், 5,929 குழந்தைகள் தங்களின் தாயையும் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,713 பலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர்கள் இருவரையும் இழந்துள்ளனர்.
இத்துடன், 8,858 உறுப்பினர்களை உள்ளடக்கிய 2,276 குடும்பங்கள் குடிமக்களின் பதிவேட்டில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாக, காஸா நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதற்குப் பிறகு காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மட்டும் இதுவரை 1,000 இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
