மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எதிர்பாராத பதற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிப்பு விடுத்துள்ள அமெரிக்கத் தூதரகங்கள், அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியேறத் தயாராக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளன.
ஜெருசலேம், அம்மான், பாக்தாத் பகுதிகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் சமூக ஊடகங்களில் ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன. அதில், மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்தால், இந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கர்கள் இங்கிருந்து வெளியேறத் தயாராக இருக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், “மத்திய கிழக்கில் தற்போது இருக்கும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும். விமானங்கள் ரத்தாவது, வான்வெளி மூடப்படுதல் மற்றும் பயணங்களில் ஏற்படக்கூடிய இடையூறுகள் ஆகியவற்றிற்குத் தயாராக இருக்கவேண்டும். உள்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சமீபத்தில் ஜோர்டானில் ஈரான் ஏவுகணைத் தாகுதல்களை நடத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, அங்குள்ள அமெரிக்கர்கள் ராணுவத் தளங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும், இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்கள் அங்குள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அமெரிக்கா அறிவுறுத்தியிருந்தது.
ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், “எந்த முன்னறிவிப்பும் இன்றி பிராந்தியத்தின் சில பகுதிகளிலும், எகிப்து போன்ற குறிவைக்கப்படாத இடங்களிலும் ஈரான் கணிக்க முடியாத தாக்குதல்களை நடத்தி வருகின்றது” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
பல நாள்கள் அமைதிக்குப் பின், ஈரானும் அமெரிக்காவும் இந்த வாரம் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளனர். ஆனால், நேற்றும் இன்றும் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படவில்லை.
ஆனால், அமெரிக்கா தனது தூதரகங்கள் மூலம் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
