லண்டனில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் நேரில் பார்க்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகளாவிய முதலீட்டாளர்களைச் சந்திக்கவும், முக்கியத் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய், வருகின்ற செப். 10ஆம் திகதி பிரிட்டன் செல்லவுள்ளார்.
முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் விஜய், செப்.16 வரை பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
இந்த நிலையில், செப். 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் சில்வர்ஸ்டோனில் நடைபெறும் மிச்செலின்
லு மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் போட்டியிடுவதை முதல்வர் விஜய் நேரில் பார்க்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கார் பந்தயத்தில் போட்டியில் பங்கேற்கவுள்ள அஜித் குமார், ஏற்கெனவே லண்டனில் தனது குழுவுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் ஒலிம்பிக் நகரம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட அஜித்குமார்,
“தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.
குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்
