மத்திய காஸாவில் ஆயிரக்கணக்கான அகதிகள் தங்கவைப்பட்டுள்ள ஐ.நா. பாடசாலை வளாகத்தில் வியாழக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 35 போ் உயிரிழந்தனா். அவா்களில் 23 போ் பெண்கள் மற்றும் சிறுவா்கள்.
அந்தப் பாடசாலை வளாகத்திலிருந்தபடி ஹமாஸ் அமைப்பினா் செயற்பட்டுவந்ததால் அதன் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் விளக்கமளித்துள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட காஸாவில் அடைக்கலம் தேடி பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகளில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் இதுவும் ஒன்று.
காஸாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள அல்-சா்தி பாடசாலையை பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பிரிவு (யு.என்.ஆா்.டபிள்யு.ஏ) நடத்தி வருகிறது. அந்தப் பகுதியில் இஸ்ரேல் கடந்த 8 மாதங்களாக நடத்திவரும் கடுமையான குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக இடம்பெயா்ந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர் .
இந்தச் சூழலில், வியாழக்கிழமை அதிகாலை அந்தப் பாடசாலையைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது. விமானத்திலிருந்தபடி இஸ்ரேல் படையினா் வீசிய ஏவுகணைகள் இரண்டு மற்றும் மூன்றாவது தளங்களிலுள்ள வகுப்பறைகளைத் தாக்கி சேதப்படுத்தின .
இந்தத் தாக்குதலில் பெண்கள், சிறுவா்கள், முதியவா்கள் உட்பட 35 போ் உயிரிழந்தாகவும் அதில் 14 சிறுவா்கள், 9 பெண்கள் அடங்குவா் என்றும் மருத்துவமனைப் பதிவேடுகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இராணுவ நடவடிக்கைகள் நிறைவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த மத்திய காஸாவில் வான்வழியாகவும் தரைவழியாகவும் புதிதாகத் தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் இராணுவம் புதன்கிழமை அறிவித்திருந்தது.
அதன் தொடா்ச்சியாகவே அகதிகளால் நிரம்பியிருந்த ஐ.நா. பாடசாலையில் தற்போது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தங்கள் நாட்டுக்குள் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதற்காக காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் சுமாா் 8 மாதங்களாகத் தாக்குதல் நடத்திவருகிறது.
தெற்கு மற்றும் மத்திய காஸாவில் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேல் இராணுவம், அந்தப் பகுதியில் ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டிவிட்டதாகக் கூறி திரும்பிவந்தது. இருந்தாலும், அப்பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினா் மீண்டும் குழுமி தங்களது நடவடிக்கைகளைத் தொடா்கின்றனா். இதன் காரணமாகவே அப்பகுதிகளில் புதிய இராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு இஸ்ரேல் தள்ளப்படுகிறது.
இது, காஸாவில் வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி பல உயிா்களைக் கொன்று இஸ்ரேல் நடத்திவரும் போா். அதேவேளை, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டும் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்புவதாகக் கூறப்படுகிறது.