நடிகர் விஜய் சினிமாவை விட்டுவிட்டு தமிழக வெற்றிக்கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார்.
இந்நிலையில் பனையூர் தமிழக வெற்றிக்கழகத்தில் தலைமை அலுவலகத்தில் வைத்து கொடி அறிமுக விழா மற்றும் கட்சியின் பாடல் அறிமுக நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. கொடி எவ்வாறு இருக்கும் என்று தமிழக மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் விஜய் 9 மணி 15 நிமிடம் அளவில் தனது வீட்டில் இருந்து பனையூர் தலைமை அலுவலகம் வந்தார். தளபதி தளபதி என்ற பாடல் ஒலிக்க அதிரடியாக நுழைந்தார் நடிகர் விஜய். இதனைத்தொடர்ந்து நிர்வாகிகளுடன் குழுப்புகைப்படம் எடுத்துகொண்டார். இதனைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை வழங்கி அனைவரையும் வரவேற்றார். இதனைத்தொடர்ந்து உறுதிமொழி கடிதத்தை வாசித்த பின்னர் இரண்டு யானைகளுடன் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் நடுவில் வாகை மலருடன் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றி வைத்த அக்கட்சியின் தலைவர் விஜய் இதுவரை நாம் நமக்காக உழைத்தோம், இனி வரபோகும் நாட்களில் தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் நாம் எல்லோரும் உழைக்க வேண்டும் என உற்சாகமாக உரையாற்றினார்.
மேலும் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய்,
“இன்று நம் எல்லோருக்குமே மிகவும் சந்தோஷமான நாள். என்னுடைய அரசியல் பயணத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினேன். நீங்க எல்லாருமே எதிர்பார்த்து காத்திருந்த கொடியை இன்று நான் அறிமுகப்படுத்தியுள்ளேன்.
என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களான உங்கள் முன்பும் சரி என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முன்பும் சரி நம் கட்சி அறிமுகப்படுத்துவதை நான் பெரும் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இது இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ் நாட்டிற்காகவும் நாம் எல்லோரும் உழைக்க வேண்டும. கட்சி ரீதியாக உழைக்க வேண்டும்”என்றார்.
