Monday, February 2, 2026
HomeSportsஇந்தியா- இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை

இந்தியா- இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய பெண்கள் அணி, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், மழையால் பாதிக்கப்பட்ட 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஸ்டர்- லீ- ஸ்டிரீட்டில் இன்று நடக்கிறது. இந்திய அணியில் ஸ்மிர்தி மந்தனா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோரும் கணிசமான ரன்கள் எடுத்தால் இந்தியாவின் பேட்டிங் மேலும் வலுவடையும்.

நாட் சிவெர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் சோபியா டங்லி, விக்கெட் கீப்பர் அமெ ஜோன்ஸ், எக்லெஸ்டோன், டாமி பீமோன்ட் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடுகிறார்கள். 2-வது ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். மொத்தத்தில், அவர்கள் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்ல வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular