Monday, February 2, 2026
HomeHealthவாய் துர்நாற்றத்தை போக்கும் எளிய வழிகள்...

வாய் துர்நாற்றத்தை போக்கும் எளிய வழிகள்…

சிலருக்கு வாயில் ஒருவித துர்நாற்றம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அதனால் மற்றவர்களுடன் பேசுவதற்கே சற்று தயங்குவார்கள். வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? வாய் துர்நாற்றம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

பொதுவாக நமது வாயில் உள்ள துர்நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாக்களால் தான் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. மேலும் வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் ஒவ்வொருவரின் உடல்நிலை, பழக்க வழக்கம் முதலானவற்றைப் பொருத்து மாறுபடுகிறது. இதுதவிர மது அருந்துவது, புகைப்பழக்கம் , கார்பனேட் செய்யப்பட்ட குளிர்பானங்களை தொடர்ந்து குடிப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படும். இந்த பழக்க, வழக்கங்களை கைவிட்டாலே வாய் துர்நாற்றம் வீசுவது நாளடைவில் குறைந்துவிடும்.

நூற்றில் எண்பது சதவீதம் பேருக்கு வாய் துர்நாற்றம் ஏற்படக் காரணம் அவர்கள் வாய் சுகாதாரத்தை சரிவர பேணாததால் தான். அதனால் அவர்கள் தினமும் இரண்டு முறை பல் தேய்க்க வேண்டும். பல் தேய்க்கும் போது நாக்கையும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். எப்போது உணவு அல்லது நொறுக்கு தீனி எடுத்துக்கொண்டாலும் உடனடியாக வாய் கொப்பளிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். வாய் வறட்சி ஏற்படாமல் இருக்க கட்டாயமாக உங்கள் உடல் எடைக்கு ஏற்ற அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

வாய் பராமரிப்பு செய்தும் வாய் துர்நாற்றம் வீசுகிறது என்றால், உடனடியாக பல் மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக சொத்தைப்பல், அஜீரணப் பிரச்சனைகள், சர்க்கரை நோய் முதலானவற்றால் வாய் துர்நாற்றம் வீசுகிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அவற்றிக்கான சிகிச்சை மேற்கொண்டாலே வாய் துர்நாற்றம் சரியாகிவிடும்.

எந்தவித நோய்க்கான அறிகுறியும் இல்லை. ஆனாலும் துர்நாற்றம் வீசுகிறது என்றால் பொதுவான வீட்டு வைத்திய முறையை பின்பற்றினாலே வாய் துர்நாற்றத்தைப் போக்கி விடலாம்.

எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பட்டைப் பொடி, சோடா உப்பு, தேன் முதலானவற்றை சேர்க்க வேண்டும். இந்த கலவையுடன் வெதுவெதுப்பான நீர் ஊற்றி வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர வாய் துர்நாற்றம் நீங்கும்.

நன்னாரி வேரை தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். நன்னாரி வேரைப்போலவே, பட்டை மற்றும் சீரகத்தையும் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.

அன்றாடம் சிறிதளவு துளசி இலைகளை மென்று சாப்பிட வேண்டும். இல்லையென்றால் துளசி இலைகளை கொதிக்க வைத்து அந்த நீரையும் குடிக்கலாம்.

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் அது சரியாகும் வரை பூண்டு, வெங்காயம் மற்றும் அதிக மசாலாப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. மேலும், காரமான மற்றும் எண்ணெய் மிகுந்த உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular