நவராத்திரி விழா தொடங்கியது: கொலுவில் முக்கிய இடம் பிடித்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு விசேஷம்தான். வீடுகள் தோறும் உற்சாகம் கரை புரண்டோடும். ஒவ்வொரு தேவியையும் வணங்கி வழிபடும் நவராத்திரி, பெண்களுக்கான விழா மட்டுமல்ல, பெண்களை உயர்வாக மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆண்களுக்குள் விதைக்கும் சிறந்த விழாவும் கூட.

நவராத்திரியின் முக்கியமான அம்சம் கொலு வைப்பது தான். 9 நாள் கொலுவில், விதவிதமான பொம்மைகளை காட்சிப்படுத்தி, அம்பாளுக்கு பூஜை செய்து வருபவர்களுக்கு பிரசாதமும், தாம்பூலமும் கொடுத்து உபசரித்து மகிழும் ஒப்பற்ற விழா தான் நவராத்தி விழா. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த நவராத்திரி விழாவில் புகழ்பெற்ற தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

தலையாட்டி பொம்மைகள் முதன் முதலில் 19-ம் நூற்றாண்டில், சரபோஜி மன்னரின் காலத்தில், தஞ்சையில் உருவாக்கப்பட்டன. காவிரி ஆற்றின் களிமண்ணால் செய்யப்படும் இப்பொம்மைகள் தஞ்சையின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன.

தலையாட்டி பொம்மைகள் அடிப்பகுதியில் பெரியதாகவும் எடை மிகுந்ததாகவும், மேற்புறம் குறுகலாகவும் எடை குறைவானதாகவும் உருவாக்கப்படுகின்றன. இதனால் இப்பொம்மைகளை சாய்த்து கீழே தள்ளினாலும், புவிஈர்ப்பு விசையின் செயல்பாட்டிற்கு ஏற்ப கீழே விழாமல் மீண்டும் செங்குத்தாகவே நிற்கும்.

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் துன்பங்களால் கீழே விழுந்தாலும், தன்னம்பிக்கை இருந்தால் மீண்டும் எழுந்து விட முடியும் என்பதை இந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் உணர்த்துகின்றன. மேலும், வார்த்தைகளில் சொல்ல முடியாதவைகளை கூட தலை அசைப்பால் உணர்த்தி விட முடியும் என்பதையும் இந்த பொம்மைகள் எடுத்து கூறுகின்றன. இப்படி வாழ்க்கை தத்துவங்களை விளக்கி கூறும் தலையாட்டி பொம்மைகள் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவில் வீடுகள், கோவில்களில் வைக்கப்படும் கொலுவில் முக்கிய இடத்தை பிடிக்கும்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles