
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.
இதில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம், யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி மதிவதனி விவேகானந்தராசா, பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, காவல்துறையினரை ஏவி கலவரத்தை ஏற்படுத்தியது.
இதன்போது, ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
