Tuesday, February 3, 2026
HomeMain Newsஇலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை - இந்திய பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு...

இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை – இந்திய பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம்

இலங்கையில் கொண்டுவரப்படும் அரசமைப்பு சீர்த்திருத்தங்களால், இலங்கை தமிழ் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்றைய தினம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,

“ஆழமான வரலாற்று, கலாசார மற்றும் உணர்வுபூர்வமான பிணைப்புகளால் இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளையும் – எண்ணங்களையும் நிலைநிறுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் முதல்வர் என்ற முறையில், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள மரியாதைக்குரிய தமிழ்த் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய அரசமைப்பு தொடர்பான பிரச்னை குறித்து பிரதமர் மோடியின் மேலான கவனத்துக்குக் கொண்டுவருவது எனது கடமை.

இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசமைப்பு சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை எடுத்துரைக்கும் விரிவான கோரிக்கைகளை நான் பெற்றுள்ளேன். இலங்கைத் தமிழர்கள் 77 ஆண்டுகளுக்கும் மேலாக, திட்டமிட்ட பாகுபாடு – வன்முறை – அவர்களின் உண்மையான உரிமைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சகித்து வந்துள்ளனர். பலர், இதனை தங்கள் சமூகத்துக்கு எதிரான இனப்படுகொலை என்று விவரிக்கும் ஒரு நிலைக்கு வழிவகுத்துள்ளது.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் அரசமைப்புகள் (1947, 1972, மற்றும் 1978 ஆம் ஆண்டுகளின் அரசமைப்புகள்) அனைத்தும் ஓர் ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பில் வேரூன்றியிருந்தன. இது திட்டமிட்ட இன வன்முறை, கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறை மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு வழிவகுத்தது.

உள்நாட்டுப் போர் முடிவடைந்த கடந்த 16 ஆண்டுகளாக, இந்த ஒற்றையாட்சி கட்டமைப்பு, பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் மக்கள் தொகை மாற்றங்கள், நில அபகரிப்புகள், தமிழ் அடையாளத்தின் சிதைவு ஆகியவற்றிற்கு தொடர்ந்து வழிவகுத்து வருகிறது.

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தலைமையிலான, பாராளுமன்றத்தில் முழுப்பெரும்பான்மையைக் கொண்ட தற்போதைய இலங்கை அரசாங்கம் இனப்பிரச்னைகளைத் தீர்க்கும் போர்வையில், புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகளைத் துரிதப்படுத்தி வருகிறது. இந்த முன்மொழியப்பட்ட கட்டமைப்பு மீண்டும் ஓர் ஒற்றையாட்சி “எக்கியராஜ்ய” (ஒற்றையாட்சி அரசு) மாதிரியை வலுப்படுத்துவதாகத் தெரிகிறது.

இது அரசியல் சுயாட்சிக்கான தமிழர்களின் நியாயமான எண்ணங்களைப் புறக்கணித்து, அதன்மூலம் அவர்களை மேலும் ஓரங்கட்டி, அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தச் சூழலில், இந்திய அரசால் பூட்டானில் ஏற்பாடு செய்யப்பட்ட 1985 அமைதிப் பேச்சுகளின்போது, தமிழ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட திம்பு கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளையே, தற்போது பெறப்பட்டுள்ள கோரிக்கைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான தேசத்தை அங்கீகரித்தல் (தமிழர் தேசியம்) – வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக ஏற்றுக்கொள்வது (தமிழர் தாயகம்), தமிழ் தேசத்துக்கான தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதல் (தமிழர் தன்னாட்சி உரிமை)

மலையகத் தமிழர்களுக்கான முழு குடியுரிமை உரிமைகள் உட்பட, அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தையும் பாகுபாடின்மையையும் உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை நிறுவுதல் போன்றவற்றையே இந்தக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன.

இந்தக் கூறுகளை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும் எந்தவொரு புதிய அரசமைப்பும் அநீதி மற்றும் நிலையற்ற தன்மை தொடர வழிவகுக்கும். இது மீண்டும் மோதல்களுக்கும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.

1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் உட்பட வரலாற்று ரீதியாக இலங்கையுடன் கொண்டுள்ள நட்புறவின் காரணமாக இலங்கையில் அமைதி மற்றும் நீதிக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா கொண்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் அவல நிலை, தமிழ்நாட்டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இலட்சக்கணக்கான மக்கள், அங்குள்ளவர்களைத் தங்கள் உறவுகளாகக் கருதுகின்றனர். இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமையில் ஏற்படும் எந்தவொரு சரிவும் இரு தரப்பு உறவுகளுக்கும், இரு நாடுகளுக்கிடையேயான உறுதிப்பாட்டுக்கும் பெரியளவில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

இந்தச் சூழ்நிலையில், தமிழ் மக்களின் குறைகளை உண்மையாக நிவர்த்தி செய்யும் ஓர் அரசமைப்பு செயல்முறையைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசாங்கம் இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகள மேற்கொள்ள வேண்டும்.

மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் செய்யும் – இனச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் – பன்முகத்தன்மை – சமத்துவக் கோட்பாடுகளை நிலைநிறுத்தும் கூட்டாட்சி முறைமையை உருவாக்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். இத்தகைய அணுகுமுறை, பிராந்திய அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்தியாவின் பங்கை மதிப்பது மட்டுமல்லாமல், கூட்டாட்சி மற்றும் மொழி மற்றும் இனச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பது குறித்த நமது அரசமைப்பு விழுமியங்களுடனும் ஒத்துப்போகும். அந்த வகையில், பிரதமர் மோடி தலைமையின் கீழ், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கும். ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வுக்கு அது பங்களிக்கும் என உறுதியாக நம்புகிறேன் – என்றுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular