சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரான இக்பால் அத்தாஸ் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.
இறக்கும்போது அவருக்கு 81 வயது என்பதுடன், அவர் சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அவரது பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 9 மணி முதல் தெஹிவளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் இன்று மாலை தெஹிவளை பெரிய பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெற்றது.
இக்பால் அத்தாஸ் இலங்கையின் ஊடகத் துறையில், குறிப்பாக பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆய்வுகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
இவர் ‘The Sunday Times’ ஆங்கிலப் பத்திரிகையின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆசிரியராகப் பணியாற்றி, அதன் ‘Situation Report’ எனும் பத்தியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர்.
இவரது துணிச்சலான ஊடகப் பணிக்காக சர்வதேச ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு குழுவினால் (CPJ) வழங்கப்படும் சர்வதேச ஊடக சுதந்திர விருது (International Press Freedom Award) உள்ளிட்ட பல கௌரவங்களைப் பெற்றுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு யுத்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் கொள்வனவுகள் மற்றும் ஊழல்கள் குறித்து இவர் எழுதிய புலனாய்வுக் கட்டுரைகள் உலகளவில் அவதானத்தைப் பெற்றன. இதற்காக அவர் பல அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டார்.
இலங்கையின் ஊடகத்துறைக்கு இக்பால் அத்தாஸ் ஆற்றிய பணிகள் மற்றும் அவர் விட்டுச் சென்ற வெற்றிடம் ஈடுசெய்ய முடியாதது எனப் பல சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் அரசியல் பிரமுகர்களும் தமது அனுதாபச் செய்திகளில் தெரிவித்து வருகின்றனர்.
