ஜனாதிபதி அநுரகுமார திஸாநயக்க தலைமையில் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதை ஒழிப்பு கூட்டத்துக்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 70 பஸ்களில் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியின் போதை ஒழிப்பு தேசிய வேலை திட்டத்தின் ஒரு பகுதியாக “முழு நாடுமே ஒன்றாக” என்கின்ற தேசிய செயற்பாட்டை ஆரம்பிக்கும் முகமாக ‘அகன்று செல்’ என்கின்ற தொனிப்பொருளில்
கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற கூட்டத்துக்கே இவ்வாறு மக்கள் அழைத்து வரப்பட்டனர்.
இதன் காரணமாக யாழ்.மாவட்டத்தில் இ.போ.ச. உள்ளூர் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்வோர் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
யாழ்.மாவட்டத்திலுள்ள இலங்கை போக்குவரத்து சாலைகளில் பஸ் பற்றாக்குறைகள் இருக்கின்ற நிலையில் ஒரே தடவையில் இவ்வாறு அதிக பஸ்களை பொது நிகழ்வுகளுக்கு வழங்கியமை பொறுப்பற்ற செயல் என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இது தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண பொறுப்பு வாய்ந்த அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, யாழ்.மாவட்ட செயலரின் கோரிக்கைக்கு இணங்க பஸ்களை விசேட கட்டணங்களின் அடிப்படையில் வழங்கியதாக தெரிவித்தார்.
