சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா சிவராத்திரி கருதப்படுகின்றது.

ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று இந்த விரதம் அனுட்டிக்கப்படுகின்றது.

இந்த விரதமானது இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் பக்திப் பெருக்குடன் அனுஷ்டிக்கப்படுகின்றது.

பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் “யார் பெரியவர்?” என்ற போட்டி எழுந்தபோது, சிவன் ஒரு பெரும் ஜோதிப் பிழம்பாகத் தோன்றினார்.

அதன் அடி மற்றும் முடியைக் காண முடியாதபடி நின்ற அந்த நாளை ‘சிவராத்திரி’ என்கிறோம்.

அதேநேரம் சிவபெருமானும் அன்னை பார்வதியும் மணந்து கொண்ட புனிதமான இரவாகவும் இது கருதப்படுகிறது.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த ‘ஆலகால’ விஷத்தை, உலகைக் காக்க சிவன் உண்டார்.

அந்த விஷம் அவர் தொண்டையிலேயே தங்கிவிட, அவர் மயக்கமடையாமல் இருக்க தேவர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து வழிபட்ட இரவே சிவராத்திரி என்றும் பல்வேறு புராணக் கதைகளில் சொல்லப்படுகின்றது.

“சிவராத்திரி” என்றால் “சிவனின் இரவு” என்று பொருள். இந்த நாளில் அடியவர்கள் மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தி, இறை சிந்தனையோடு விழித்திருப்பது ஆன்மீக முன்னேற்றத்தைத் தரும்.

“ஒருவர் தன் வாழ்நாளில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் இந்த ஒரு நாள் விரதத்தினால் நீங்கும்” என்பது ஐதீகம்.

உடல் தூய்மைக்காகவும் மன ஒருமைப்பாட்டிற்காகவும் உணவு உட்கொள்ளாமல் இருப்பது.

இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பது. இது அறியாமை எனும் உறக்கத்திலிருந்து விடுபட்டு ஞானம் பெறுவதைக் குறிக்கும்.

சிவலிங்கத்திற்கு பால், தயிர், தேன், நெய், இளநீர் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது.

இரவு முழுவதும் ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை உச்சரிப்பது.

மகா சிவராத்திரி என்பது நம்முள்ளே இருக்கும் ஆன்மாவைத் தரிசிப்பதற்கான ஒரு வாய்ப்பு. சிவமே அன்பு, அன்பே சிவம் என்ற தத்துவத்தை உணர்ந்து, ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை விடுத்து இறைவனிடம் சரணடைவதே இந்த நன்னாளின் உண்மையான நோக்கமாகும்.

இன்றைய தினம் இலங்கையில் உள்ள பல சிவாலயங்கள் மற்றும் ஏனைய ஆலயங்களிலும் சிவராத்திரி விரத விசேட பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here