#image_title

யாழ்ப்பாணம், மண்டைதீவுப் பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளையும், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும்வரை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையின் ஒரு பகுதியாக, ‘திட்ட வரைபு அறிக்கை’ ஒன்றை சிறீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கபில மஹேஷ் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட 48 ஏக்கர் காணி, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் வரவில்லை என்பதை வனப் பாதுகாப்புத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை சிறீலங்கா கிரிக்கெட் சமர்ப்பிக்கும் வரை பணிகளைத் தொடர முடியாது.

சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படுவதற்கு முன்னரே அங்கு நிலத்தை சமப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளதாகக் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து, யாழ்ப்பாண அலுவலக அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர்.

1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ், அனுமதி இன்றி இத்தகைய திட்டங்களை முன்னெடுப்பது சட்டவிரோதமாகும்.

இதன்படி, கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி பணிகளை நிறுத்துமாறு சிறீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம், இந்தத் திட்டம் கட்டாய சுற்றுச்சூழல் அனுமதியின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதனை உடனடியாக நிறுத்துமாறு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here