பாகிஸ்தானில் அமெரிக்கா – ஈரான் இடையே 21 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அமெரிக்கா – ஈரான் இடையே எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்று தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட அவர் –
‘ஓர் உடன்பாடு எட்டப்படும் வகையில், பேச்சுவார்த்தைகளைச் சுமூகமாக முன்னெடுத்துச் செல்வதில் பாகிஸ்தான் சிறப்பாகச் செயல்பட்டது’.
‘நாங்கள் கடந்த 21 மணி நேரமாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறோம்; ஆனால் வருத்தத்திற்குரிய செய்தி என்னவென்றால், எங்களால் எந்தவொரு உடன்பாட்டையும் எட்ட முடியவில்லை,’
அணுசக்தி விவகாரம் போன்ற அமெரிக்காவின் முக்கிய கோரிக்கைகளுக்கு இணங்க ஈரான் தயாராக இல்லை. அமெரிக்கா தனது இறுதி முன்மொழிவை அளித்துவிட்டது.
அமெரிக்காவின் முன்மொழிவை ஏற்றுக்கொள்வது ஈரானின் கையில்தான் உள்ளது.
‘நாங்கள் எங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்துவிட்டோம். ஆனால், அவர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்துவிட்டனர். இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்திருந்தால், அதற்குக் காரணம் பாகிஸ்தானியர்கள் அல்ல. ஏனெனில் அவர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர்,’ என்று அவர் கூறினார்.
அவர் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரைப் பாராட்டினார். அமெரிக்க பேச்சுவார்த்தைக் குழு பாகிஸ்தானிலிருந்து விடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
