துருக்கியில் உள்ள ஒரு நடுநிலைப் பாடசாலையில் 14 வயது மாணவன் நேற்று (15) நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் மற்றும் ஓர் ஆசிரியர் என 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.
துருக்கியில் துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான சட்டங்கள் கடுமையாக உள்ளது.
அதேபோல் பாடசாலைகளில் துப்பாக்கிச்சூடு நடப்பது மிகவும் அரிதான நிலையில், கடந்த 2 நாள்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற 2 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலையில் பயின்று வரும் 8ஆம் வகுப்பு மாணவன், ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியான தனது தந்தையின் 5 துப்பாக்கிகள் மற்றும் 7 தோட்டா பெட்டிகளை புத்தகப்பையில் மறைத்து, பாடசாலைக்கு எடுத்து சென்றுள்ளார்.
பாடசாலையில் 5ஆம் வகுப்பு நடைபெறும் 2 வகுப்பறைகளுக்குள் நுழைந்து, கண்மூடித்தனமாகச் சுட்டதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன.
தாக்குதலுக்குப் பிறகு அந்த மாணவனும் தன்னைத்தானே சுட்டுக் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இது தொடர்பாக மாணவனின் தந்தை கைதுசெய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார்.
துப்பாக்கிச் சூடு குறித்த அதிர்ச்சியூட்டும் காணொளிகளை ஊடகங்கள் ஒளிபரப்பத் துருக்கி அரசு தடை விதித்துள்ளது.
தாக்குதல் குறித்து துருக்கி உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃப்ட்சி கூறுகையில்,
‘காயமடைந்த 13 பேரில் 6 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது. இது அந்த மாணவன் தனிப்பட்ட விரக்தியில் நடத்திய தாக்குதலே தவிர, பயங்கரவாதச் செயல் அல்ல’ என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று, சன்லியுஃபா மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பாடசாலையில் முன்னாள் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள், ஆசிரியர்கள் என 16 பேர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய அந்த மாணவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
