கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் முண்டத்திகோட் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிழந்தனர்;.
திருச்சூர் மாவட்டத்தில் ஆடிப்பூரம் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும். அப்போது வாண வேடிக்கைகள் அதிக அளவில் நடைபெறும். அதற்காக இந்தத் தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை தொழிற்சாலையில் 65இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இதையடுத்து அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதில் 13 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 40 பேர் காயமடைந்து திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, ‘இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும்’ என்றார்.
