நியூயோர்க்கில் உள்ள ஐநா சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூகப் பேரவையின் 2026ஆம் ஆண்டு இளைஞர் ஆய்வரங்கில், மலேசிய இந்திய இளைஞர் மன்றமான MIYC சார்பாக ஷமீரா நஸ்ரின் பங்கேற்று மலேசிய இளையோர்களின் குரலை உலக அரங்கில் பதிவுச் செய்தார்.
ஏப்ரல் 14 முதல் 16 வரை நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிய மற்றும் பசுபிக் வட்டார மேம்பாட்டு சவால்கள் குறித்த அமர்வில் அவர் உரையாற்றினார்.
அரசாங்க நிறுவனங்களுடன் இணைந்து கொள்கை உரையாடல்களில் ஈடுபடுவதிலும், தலைமைத்துவ மேம்பாட்டை வளர்ப்பதிலும் மலேசிய இளைஞர் மன்றத்தின் பங்கினையும் அதன்போது அவர் விளக்கினார்.
அதோடு, தேசிய வளர்ச்சித் திட்டங்களில் இளைஞர்களின் கருத்துக்களை ஒருங்கிணைப்பதற்கான வழிமுறையாக இளைஞர் மன்றங்கள் செயல்படுவதை வலியுறுத்திய ஷமீரா, , ECOSOC 2026 தலைவர் மற்றும் ஐநா சபைக்கான மலேசியத் தூதரக அதிகாரிகள் உட்பட பல உலகத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதே சமயம், இந்தக் குரல்கள் வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், செயலாக்கம் காணக் கூடிய கொள்கைகளாக மாற்றப்பட வேண்டும் என்று ஷமீரா தனது உரையில் வலியுறுத்தினார்.
உலகளாவிய நிலையான வளர்ச்சியை உருவாக்குவதில் மலேசிய இளைஞர்கள் முக்கியப் பங்களிப்பாளர்களாக அங்கீகரிக்கப்படுவதை இந்த அனுபவம் பிரதிபலிக்கிறது என ஷமீரா தெரிவித்தார்.
இது அனைத்துலக மேடைகளில் மலேசியாவின் இருப்பை உறுதிப்படுத்துவதுடன், இளைஞர்களின் தலைமைத்துவத்தை மேம்படுத்தும் தங்களது கடப்பாட்டை மீண்டும் நிலைநாட்டுவதாக MIYCயும் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
