ஹோர்முஸ் நீரிணையில் கொள்ளையர்கள் போல நடந்து கொண்டு கச்சா எண்ணெய் கப்பல்களை கைப்பற்றினோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் – ஈரான் இடையே போரை நிறுத்துவதற்காக பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததைத் தொடர்ந்து போர் நிறுத்தம் அமுலில் உள்ளது.
இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் தடுப்புகளை ஏற்படுத்திய போதும், கச்சா எண்ணெய்யை ஏற்றிச் சென்ற ஒரு கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சுமார் 20 லட்சம் பீப்பாய்கள் கொண்ட கச்சா எண்ணெய்யை ஏற்றிச் சென்ற கப்பலை இடைமறித்து அதை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிபர் ட்ரம்ப் கூறும்போது, ‘நாங்கள் அந்தக் கப்பலில் இருந்த சரக்கைக் கைப்பற்றினோம். எண்ணெய்யைக் கைப்பற்றினோம். இது மிகவும் லாபகரமான தொழில். நாங்கள் கடற்கொள்ளையர்களைப் போன்றவர்கள்’ என்று கூறியுள்ளார்.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்துக்கான முக்கிய பாதையாக திகழும் ஹோர்முஸ் நீரிணை உள்ளிட்ட முக்கிய நீர்வழிகளில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
