சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளிப்பதைத் தடுத்த ஒரு இளைஞர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை சிங்கப்பூர் சுவா சூ காங் வட்டாரத்தில் பெண் ஒருவர் புறாக்களுக்குத் தீனி போட்டுக்கொண்டிருந்தார்.
அந்த வழியாகச் சென்ற இளைஞர் ஒருவர் அவ்வாறு செய்வது தவறு என்று பெண்ணிடம் சுட்டிக்காட்டினார்.
இதனால் கோபமுற்ற பெண் தகாத சைகைகளைக் காட்டினார். அத்துடன் அவர் தமது கைப் பையை வைத்து தாக்குதல் நடத்தினார்.
அந்த இளைஞர் அங்கிருந்து விலகிச் சென்றபோதும் பெண் அவரைப் பின்தொடர்ந்து சென்று சில பொருள்களை அவர் மீது வீசினார்.
பாதிக்கப்பட்ட இளைஞர் உடனே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தைக் காட்டும் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இணையவாசிகள் அதை 200,000 இற்கும் மேற்பட்ட முறை பார்த்தனர். இது காணொளி உரையாடலுக்கும் வழி வகுத்தது.
பறவைகளுக்கு உணவளிப்பது கனிவான செயல் என்றாலும் சிங்கப்பூரில் அதற்கு இடம் இல்லை என்று சிலர் கூறினர். பெண் அவ்வாறு நடந்துகொண்டமை தவறு என்று பலரும் சுட்டிக்காட்டினர்.
