முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவுகளை தாங்கிய ஊர்தி பவனி இன்று – மே 12ஆம் திகதி நல்லூரில் தியாகதீபம் திலீபன் நினைவிடத்திலிருந்து ஆரம்பமானது.
நிகழ்வின் தொடக்ககமாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் நினைவு ஊர்திக்கு பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, தமிழின அழிப்பின் அடையாள உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்த ஊர்தி பவனி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சகல மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக மே 18ஆம் நாள் முள்ளிவாய்க்காலை சென்றடையும்.
இலங்கை சுதந்திமடைந்த காலம் முதல் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். அகிம்சை வழியில் நடந்த போராட்டம் பின்னர் ஆயுதவழியாக மாற்றம் பெற்றது. சுமார் 3 தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடர்ந்த தமிழரின் ஆயுதவழியிலான உரிமைப் போராட்டம் 2009 மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலுடன் மௌனித்துப் போனது. இந்தநாள் தமிழின அழிப்பு நாளாக தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது தெரிந்ததே.




