தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அ. தி. மு. கவில் ஏற்பட்டிருந்த உட்பூசல் தற்போது பிளவாக வெடித்துள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் அணி என இரு துருவங்களாகக் கட்சி பிளவுபட்டது.
முன்னாள் அமைச்சர்கள் பலர் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தமைக்கு எடப்பாடி பழனிசாமியின் தவறான தலைமைத்துவமே காரணம் என சி. வி. சண்முகம் தரப்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தது. அத்துடன், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
இந்த முறுகல் நிலை உச்சமடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவாக அண்ணா திராவிட முன்னேற்ற கழக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதனையடுத்து, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தினர் என்றும் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டனர் எனவும் தெரிவித்து, அதிருப்தி அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.
