கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்த ஒரு வாரத்துக்குள்ளேயே பிள்ளையானை சிறையிலிருந்து விடுவிக்க எடுத்த முயற்சி தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
பிள்ளையான் என்று அறியப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தனிப்பட்ட செயலாளர் ஆசாத் மௌலானா அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இந்த விடயம் தெரியவந்ததாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தினார்.
தற்போது பிரான்ஸில் வசிக்கும் ஆசாத் மௌலானா அங்குள்ள தூதரகத்தில் வைத்து விசேட புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த விடயங்கள் தெரியவந்தன என்றும் தெரிவிக்கப்பட்டப்பட்டது.
அந்த வாக்குமூலத்தின் விபரங்களை நீதிமன்றில் சமர்ப்பித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஒரே வாரத்துக்குள், சிறையில் இருந்த பிள்ளையானை எப்படியாவது பிணையில் எடுப்பதற்கான விசேட வேலைத்திட்டங்கள் மற்றும் பேச்சுகளை முன்னெடுத்திருந்தார் என்று அசாத் மௌலானா தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் வாக்குமூல ஆவணங்களும் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
