வடமராட்சிப் பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் நகைகள் என்பவை களவாடப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள், வீட்டில் இருந்த ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
வீட்டின் சமையலறை ஊடாக புகுந்த திருடர்களே வீட்டில் இருந்த பணத்தைக் களவாடி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
குறித்த வீட்டு உரிமையாளர் சீட்டு பிடிக்கும் தொழில் செய்பவர் என்றும் , நேற்று முன்தினம் சனிக்கிழமை சீட்டு கூற இருந்த நிலையில், சீட்டுப் பணமான ஒரு கோடி 15 இலட்சம் ரூபாய் பணத்தை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தவேளையே குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, உடுப்பிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 25 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்
வீட்டு உரிமையாளர் காலையில் எழுந்தபோது , வீட்டின் முன் பக்க கதவுகள் திறந்து இருப்பதை அவதானித்து நகைகள் வைத்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது , நகைகள் களவாடப்பட்டமை தெரியவந்தது.
நகைகள் களவாடப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
