தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதுடன் 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானின் நபாத்தியா மாவட்டத்தின் பல நகரங்கள் மீது நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை இந்த தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் நடத்தி உள்ளது. வான்வழித் தாக்குதலோடு பீரங்கித் தாக்குதல்களும் நடந்ததாக லெபனான் ஊடகங்களும், அப்பகுதி மக்களும் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் இராணுவ வீரர்கள் 4 பேர் ஹிஸ்புல்லா படையினரால் கொல்லப்பட்டதை அடுத்து, பதில் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானின் பல பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினரையும் அவர்களின் உள்கட்டமைப்புகளையும் குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேல், ஈரான் ஆதரவு பெற்ற அந்த அமைப்பு மீண்டும் மீண்டும் போர் நிறுத்தத்தை மீறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா இயக்கம், “தெற்கு லெபனானின் அலி அல் தாஹெர் குன்றின் அருகே முன்னேறி வந்த இஸ்ரேலியப் படையை எங்கள் போராளிகள் பதுங்கி இருந்து தாக்கினர். ஏவுகணைகள் மூலம் மூன்று டாங்கிகளை அழித்தனர். ராக்கெட் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் மூலம் துருப்புகளை குறிவைத்தனர். மோதல்கள் தொடர்கிறது” எனத் தெரிவித்துள்ளது.
