“புதிய மாற்றத்திற்கான சூழல் தற்போது தேவைப்படுகிறது” – என்று பிரித்தானியாவின் சவுத்போர்ட் தொகுதி தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பற்றிக் ஹுர்லே தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என வலியுறுத்தப்பட்டுவரும் சூழ்நிலையிலேயே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“தொழிலாளர் கட்சியின் அரசியல் வரலாற்றில் கெய்ர் ஸ்டாமர் ஒரு மாபெரும் தலைவராக நினைவுகூரப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு. தற்போதைய சூழலில் நமக்கு ஒரு புதிய வடிவத்திலான மாற்றம் அவசியமாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளாக பிரித்தானியா எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்சினைகளுக்கு, தற்போதைய அரசு வெறும் ‘ஆய்வுக் குழுக்கள்’ அல்லது ‘விசேட பணிக்குழுக்கள்’ அமைப்பதையே தீர்வாக வழங்கிவருகின்றது.” என பற்றிக் ஹுர்லே அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
எனினும், கட்சியில் உடனடித் தலைமைத்துவத் தேர்தல் ஒன்றை தான் விரும்பவில்லை என்று கூறிய அவர், நாடாளுமன்ற தொழிலாளர் கட்சியினதும், நாட்டு மக்களினதும் விருப்பம் என்ன என்பது இப்போது தெளிவாகத் தெரிந்த ஒன்றே என்றும் சுட்டிக்காட்டினார்.
எனவே, பிரதமர் கெய்ர் ஸ்டாமர் இப்போதே ஒரு புதிய மாற்றத்திற்கான வழிமுறைகளையும், அதற்கான செயல்முறைகளையும் வகுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரான பற்றிக் ஹுர்லே அறைகூவல் விடுத்தார்.
